”ஏங்க, என்னைய
பத்தி பேசச் சொன்னா, எழுதச் சொன்னா உடனே சந்தோசமா செய்விங்களே, ஏன் ஈகில் இன்னும் கல்யாணம்
பண்ணலைன்னு எழுதுறது” என்று தொட்டில் குழந்தையை படித்துவிட்டு, ஸ்பேரோ ஃபோனில் கத்த,
இது கட்டளையா, சவாலா, மிரட்டலா, இல்லை கோரிக்கையா என வகைப்படுத்த முடியாமல் முழித்துக்
கொண்டிருந்தேன்.
அதே நேரத்தில்
நமது Podcast நேயர்கள் பலரும் பல முறை கேட்ட கேள்விதான் இது, “ஏன் ஈகிலுக்கு திருமணம்
என்றாலே பிடிக்கவில்லை?”. சரி, ஒரு கதையின் மூலம் அதற்கும் ஒரு பதிலை தந்துவிடுவோம்
என்று எழுதத் துவங்கிவிட்டேன்.
முன் குறிப்பு : ’இந்த கதை முழுக்க கற்பனையே’ என்று ஈகிலும், ‘இது ஒரு வாழ்க்கையின் சரிதம்’ என்று ஸ்பேரோவும் எழுதச் சொல்லி கூறினர்.
(நமக்கு என்னப்பா, ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்ன மர சின்னத்துல ஒரு குத்து).
முதல் காட்சி:
முன்பொரு
வசந்த காலத்தில், சில நாள் பயணமாக, நான் சென்னை போய் இறங்கியபோது, என்னை வடபழனியில்
அழைக்க வந்த ஈகில் ஒருவித பதட்டதுடன் இருந்தார். என்னவென்று கேட்ட போது, “ஒன்னுமில்ல,
நீங்க என்னோட வீட்டுல தங்க முடியாது, உங்களுக்கு நான் ரூம் போட்ருக்கேன் அதுல இருந்துக்கோங்க”
என்று சொன்னார்.
நானும் அவருடைய
நிலைமை புரியாமல், ”எங்க? பார்க் ஆ, தாஜ் ஆ, இல்ல லீலா பெலஸ் ஆ” என்று கேட்க. சின்ன
சிரிப்புடன், சீனி போடாத லெமன் டீயை குடித்த படி, ”பார்குக்குதான் போறோம், ஆனா பனகல்
பார்க், ஏன்னா இப்போ நேரா நம்ம ரூமுக்கு போக முடியாது” என்று சொல்லிவிட்டு வண்டியை
எடுத்தார்.
அவரது கண்களில்
இருந்த சிறு கலக்கத்தையும், உதட்டில் இருந்த வித்யாசமான விரக்தி சிரிப்பையும், பார்த்தபடி
பாண்டி பஜாரின் ஒரு பெஞ்சில் பேந்தப் பேந்த முழித்துகொண்டு இருந்த என்னிடம் தனது கதையை
கூற ஆரம்பித்தார்.
சட்னியும் சந்திப்பும்:
சில மாதங்களுக்கு
முன்பு, பிரபலமான மோமோ கடையில் ஈகிலின் சட்டையில் சட்னியை சிந்தியதின் மூலம் சந்தித்த
இளம் பெண் ஒருவர். சிந்திய சட்னியில் ஆரம்பித்த அவர்களின் உறவு சீர்நடையில் வளர்ந்து,
சிறந்த நட்பாகவும் மாறியது.
ஆண் பெண்
நட்பு காதலாக மாறுவது சில பல நேரங்களில் நடக்க கூடியதுதானே. அதுவும் ஈகில் போன்ற பேரழகும்
பெரும் பண்பும் கொண்டவரிடம் அந்த பெண்மணிக்கு அளவில்லா காதல் வருவதில் வியப்பு என்ன
இருக்கிறது.
ஈகில் மேல்
அந்த பெண்ணுக்கு காதல் என்றால் காதல் அப்படியொரு காதல். அந்த பெண்ணே நேராக காதலை சொல்லி,
ஈகிலை வாயடைத்துப் போக செய்தார். ஒரு நாளைக்கு ஒராயிரம் முறை அவருக்கு ஃபோன் செய்து
விடுவார், ஒன்பது முறையாவது நேரில் பார்க்க முயற்சி செய்து விடுவார் அந்த பெண்மணி.
அந்த பெண்ணுக்கு
ஒரு விசித்திரமான ஒரு குணம் உண்டு. விதியின் மேல் வீரியமான நம்பிக்கை கொண்டவர், இந்த
பிரபஞ்சம் ஒரு சக்தி மயமாய் இருந்து தன்னை ஆட்டுவிப்பதாக தீவிரமாக நம்புபவர். இவ்வளவு
ஏன், ஈகிலின் மீது சட்னி சிந்தி, அவர்கள் சந்திக்க வழி செய்ததே அந்த சக்தியின் வேலைதான்
என நம்பிக்கொண்டிருந்தார் அந்த பிரபஞ்ச சுந்தரி.
காதல் என்றால்
சிரிப்பு மட்டும்தானா என்ன? சிக்கல்களும் இயல்புதானே. ஒரு நாள் இயல்பாக பேசிக்கொண்டிருக்கும்
போது. ஈகில் “உண்மையா பிரபஞ்சம் உன் காதல சேர்த்து வைக்கும்ன்னு நீ நம்புறியா?” என்று
கேட்க. அவங்களும் ”கண்டிப்பா நம்புறேன், நீயும் நானும் ஒன்னா சேரத்தான் பிறந்து இருக்கோம்,
நமக்கு எந்த சிக்கலும் வராது, அது இந்த பிரபஞ்சத்தின் கட்டளை” என்று சொன்னார்.
அதை கேட்டு
இவர் முகம் ஒரு மாதிரி மாறுவதை பார்த்த அந்த பிரபஞ்ச சுந்தரி, ”ஒன்னுமில்ல இப்போ இந்த
காதலுக்கு பிரபஞ்சம் எப்படி துனை நிக்கிதுன்னு காட்டுறேன் பாக்குறியா?”என்று சொல்லி,
”கண்ண மூடி இந்த நொடி உனக்கு என்ன தோனுதுன்னு சொல்லு” என்று கேட்க. இவரும் அதை போல
செய்து விட்டு ”வேற என்ன பசிக்கிது சாப்டனும்” என்று சொன்னார்.
உடனே ”இப்போ
நாம ரெண்டு பேரும் உன் வீட்டுக்கு போவோம், அங்க நானே உனக்கு சாப்பாடு சமைச்சி போடுறேன்,
நமக்கு எந்த தடங்கலும் வராது பாரு” என்று அவங்க சொல்ல.
இவரும் “அது
எப்படி வரும், நான் வீட்டுல தனியா இருக்கேன். நீ வந்து சமைச்சா யார் கேட்க போறா?, என்னோட
Room mate கேட்டாதான் உண்டு”, என்று சொல்ல.
“இல்லப்பா
பிரபஞ்சம் நம்மள ஒன்னு சேர்க்க நினைக்கலேனா இது கூட நடக்காது, ஏதாவது தடங்கள் வரும்”
என்று சொல்லி இருவரும் அவரோட வீட்டிருக்கு கிளம்பினர். வீட்டின் தெரு முனைக்கு திரும்பவும்,
ஈகிலின் Room mate ஃபோனில் கூப்பிட்டு, “டேய், வீட்டுல பெரிய பஞ்சாயத்து ஒன்னு நடந்து
போச்சு டா” என்று சொல்லவும் சரியாக இருந்தது.
(தொடரும்...)
--- Phoenix